Tuesday, February 18, 2014

சதுரகிரி - 1

முத்துநகர் எக்ஸ்பிரஸ் பிடித்து நேராக சென்னையிலிருந்து விருதுநகர். காலை விருதுநகரில் இருந்து பஸ் பிடித்து நேராக தாணிப் பாறை. அது தான் சதுரகிரி அடிவாரம். அங்கிருந்து மேலே ஏற மூன்றரை முதல் நான்கு மணி நேரம்

மேலே இராத் தங்கல். காலையில் நேரத்தில் எழுந்து மேலே போய் தவசிப் பாறை, பெரிய மகாலிங்கம், இன்னும் சித்தர் குகைகள் எல்லாம் பார்த்து விட்டு மத்தியானம் கீழே இறங்க வேண்டியது.

அங்கிருந்து நேராக ஸ்ரீவில்லிபுத்தூர். ஆண்டாள் உடனுறை ராஜமன்னாரையும் வடபத்ரசயனரையும் தரிசித்து விட்டு ராத்திரி பொதிகையைப் பிடிக்க வேண்டியது.

இது தான் இனிஷியலாகப் போட்ட ப்ளான். ஆனால் இதில் பாதி தான் நடந்தது கடைசியில்.

"எங்க அப்பா ஏன் வந்து பாக்கலன்னு கேட்டுகிட்டே இருக்காருடா. இப்ப அருப்புக் கோட்டையில தான் இருக்காராம்.அதனால நம்ம பிளான்ல ஒரு சின்ன சேஞ்ச். விருதுநகர் போவாம மதுரையிலேயே இறங்கிருவோம்.

அங்கிருந்து அருப்புக் கோட்டை போயி அப்பாவைப் பாத்துட்டு அப்புறம் சதுரகிரிக்குப் போவோம் டா " என்றான் பார்த்தி.ப்ளானின் முதல் சேஞ்ச்.

முத்துநகர் ஏறி, கொஞ்ச நேரம் அரட்டை அடித்து விட்டு அம்மா கொடுத்த ரொட்டியை தின்று விட்டு, பக்கத்து சீட்டுகளில் குழந்தைகளோடு இருந்த அம்மாக்களெல்லாம் அவசரப் படுத்தவே, மேலே ஏறி பெர்த்தில் படுத்தாயிற்று.

தூக்கம் வந்தால் தானே? அந்த குட்டியூண்டு இடத்துக்குள் எந்தெந்த ஷேப்பிலெல்லாம் புரள முடியுமோ அத்தனையும் ட்ரை பண்ணி முடித்த பின் ஒரு வழியாக மன சமாதானமாகி கொஞ்சம் தூக்கம் வருகிறாற் போல் இருந்தது. தூங்கலாம் என்று நினைப்பதற்குள் மதுரை வந்து விட்டது. சத்திய சோதனை.

மதுரையில் இறங்கி அருப்புக்கோட்டை போய் அங்கே பார்த்தி வீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட். பார்த்தியின் அப்பா அங்கிருந்த இரண்டு கோவில்களுக்குக் கூட்டிப் போனார். ஊரில் அவருக்கு செம மரியாதை.

நான்ங்கள் கோவிலுக்குப் போய் திரும்பி வருவதற்குள் ஒரு பத்துப் பேராவது நின்று " என்னண்ணே... சவுக்கியமா" என்று விசாரித்திருப்பார்கள்.

கோவில் பார்த்து முடித்து பிரேக்பாஸ்ட் முடித்து வீடு வரும் போது அங்கிருந்து சதுரகிரி கிளம்ப ஒரு கார் ஏற்பாடு பண்ணி வைத்திருந்தார்.

கொஞ்சம் கூட உடம்பு நோகாமல் தாணிப் பாறை ( சதுரகிரி அடிவாரம் ) வந்து சேர்ந்தாயிற்று.

வெயில் ஊறும் பாதை
அடிவாரத்தில் இருந்த வினாயகரை வணங்கிக் கொண்டு மெல்ல ஏற ஆரம்பித்தோம்.
போகும் வழியில்

ஆங்காங்கே நின்று நின்று இளைப்பாறி ,வழியில் இருந்த பலாவடிக் கருப்பசாமி, ரெட்டை லிங்கம் எல்லாவற்றையும் வணங்கி, கோரக்கர் குகையை தரிசித்து, வெயிலில் கால்கள் பொரிய


கோரக்கர் குகை
நடை தொடர்ந்து மேலே சுந்தர மகாலிங்கம் கோவிலை அடையும் போது மணி மதியம் மூன்றே முக்கால்.

சுற்றும் முற்றும் பார்த்த பார்த்தி, " என்னடா.. போன முறை நான் வர்றப்போ ஏகப்பட்ட கடை இருந்துச்சு..இப்ப ஒண்ணு கூட காணோமே?" என்று யோசனையாய்க் கூறினான்.

அவன் கேட்ட கேள்விக்கான பதில் தான் எங்களின் இந்த ட்ரிப்பில் ஆகப் பெரிய ஏமாற்றமாக இருக்கப் போகிறதென்று அப்போது தெரியவில்லை.

2 comments:

  1. நானும் உன்னோடு சதுரகிரிக்கு பிரயாணம் செய்வது போல இருக்கு. அருமையான நடை. சீக்கிரம் 2 யும் போஸ்ட் பண்ணு.

    ReplyDelete